மதுரை கோவில் திருவிழாவில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது இரு பிரிவினரிடைய ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்த நிலையில் 30க்கும் மேற்பட்ட பைக்குகள் கார் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் திருவிழாவின் போது நேற்று இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்க்க விடாமல் மறைத்தபடி ஒரு தரப்பினர் ஆடிக்கொண்டிருந்ததால் மற்றொரு தரப்பினர் அவர்களை வழிவிடும்படி கேட்டுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து இருதரப்பினரிடமும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நிலையில் நொண்டிகோவில் தெரு பகுதிக்குள் புகுந்த சிலர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட பைக்குகள் மற்றும் ஓட்டு வீடுகளை உடைக்க தொடங்கினர். மேலும் வீட்டில் இருந்தவர்களையும் தாக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் கலவரத்தை தடுத்து நிறுத்தினர்.