மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்துவரி பெயர் மாற்றம் தொடர்பாக 14 மனுக்களும், புதிய வரி விதிப்பு வேண்டி 3 மனுக்களும், காலிமனை வரி விதிப்பு வேண்டி 3 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 10 மனுக்களும், சொத்து வரி திருத்தம் தொடர்பாக 18 மனுக்களும், சுகாதாரம் தொடர்பாக 2 மனுவும், தெருவிளக்கு வசதி வேண்டி 4 மனுக்களும், இதர மனுக்கள் 1 மனுவும், சாலை வசதி, குடிநீர், பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி 16 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 4 மனுக்களும் என மொத்தம் 75 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக பெறப்பட்டது.
தொடர்ந்து, சி.எம்.ஆர். சாலையிலுள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மண்டலம் 4 மற்றும் மண்டலம் 5-க்கு உட்பட்ட வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள இரண்டு கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்களில் ரூ.23.71 லட்சம் மதிப்பீட்டில் தேவையான இயந்திரங்கள் பொருத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்ட வாகனங்களை திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு இன்று முதல் பயன்பாட்டிற்கு மேயர் கொண்டு வந்தார்.

இந்நிகழ்வில், மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஸ்வரி,
முகேஷ்சர்மா, சுவிதா, உதவி ஆணையாளர்கள் அமிர்த லிங்கம், சுரேஷ்குமார், சையத் முஸ்தபா கமால், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கண்காணிப்பாளர்கள், உதவிப் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.