பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற 27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். இதில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்- 2023 போட்டி, பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்தரில் ஜூன் 12 முதல் 28 வரை நடைபெற்றது.
அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பின்னர் அரையிறுதியில், 3க்கு 1 என்ற கோல் கணக்கில் ரயில்வே அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு சீனியர் பெண்கள் கால்பந்து அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர், இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஹரியானா அணியை வென்று, முதலிடம் பெற்று தங்கப் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இப்போட்டியில் டி.தேவி, என்.சௌமியா, பி. தனலட்சுமி, எஸ்.கௌசல்யா, என்.லாவண்யா, எம்.பவித்ரா, பி.துர்கா, எஸ்.சண்முகப்பிரியா, எம்.சுபாஷிணி, எம். பரமேஸ்வரி, எஸ். பிரியதர்ஷினி, எம்.மாளவிகா, எம்.நந்தினி, ஏ. கார்த்திகா, கே. இந்துமதி, ஆர். வினோதினி, எஸ். ஐஸ்வர்யா, ஆர். சந்தியா, பி.சந்தியா, எஸ். சண்முகப்பிரியா, ஆர். யுவராணி, என். அம்சவள்ளி மற்றும் பயிற்சியாளர்கள் திருமதி. எஸ். கோகிலா மற்றும் திருமதி வி. கலா ஆகியோர் பங்கேற்றனர்.