மதுரை விமான நிலையம் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் 14.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துபாயில் இருந்து மதுரைக்கு, ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று காலை 8:20 மணி அளவில் வந்தடைந்தது. இதில் பயணம் செய்த பயணி ஒருவர் தன்னிடமிருந்த பேஸ்ட் போன்ற தங்கப்பொருளை குப்பைத் தொட்டியில் வீசி சென்றதாக கூறப்படுகிறது. இதை கண்டுபிடித்த மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர் உடனடியாக சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த சுங்கத்துறை அதிகாரிகள் பேஸ்ட் போன்ற பொருளை கைப்பற்றி சோதனை செய்தனர். 14 லட்சத்து 36 ஆயிரத்து 472 ரூபாய் மதிப்புள்ள 287 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விமானத்தில் வந்த பயணியை அடையாளம் காணும் வகையில் வீடியோ காட்சிகளை பார்வையிட்டு வருகின்றனர். இதனால் மதுரை விமான நிலைய வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.