தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 92 கிலோ அழுகிய மீன்களை பறிமுதல் செய்யப்பட்டு அவை அழிக்கப்பட்டன.
ஒகேனக்கலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தும், பரிசல் சவாரி செய்தும், அம்மியில் அரைத்து சமைக்கப்படும் சுவையான மீன் குழம்பை ருசித்து செல்கின்றனர்.
இந்நிலையில் சுற்றுலா வரும் பொதுமக்கள் இங்கு கெட்டுப்போன மீன்களை சமைத்துத் தருவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்தனர். இதையடுத்து தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பானு சுஜாதா, பென்னாகரம் அலுவலர் கந்தசாமி, ஒகேனக்கல் மீன்வளத்துறை அலுவலர் வேலுச்சாமி ஆகியோர் திடீரென ஒகேனக்கல் மீன் விற்பனை கூடம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
மீன்கள் மீது பார்மலின் கெமிக்கல் பூசப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். பின்னர் ஒரு சில கடைகளில் தரமற்ற முறையில் அழுகிய நிலையில் இருந்த 92 கிலோ மீன்கள் இருப்பதை கண்டுபிடித்து அவற்றை அழித்தனர். மீன் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கிய அலுவலர்கள் மீண்டும் அழுகிய மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.