சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிமையாக்க பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது.
முதல்கட்டமாக சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களை அருகிலுள்ள பகுதிகளுடன் இணைக்க அரசு ஏற்கனவே மினி பேருந்துகளை இயக்கி வருகிறது. ஜூன் 14, 2024 அன்று தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு அதன்படி மாநிலம் முழுவதும் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஒரு புதிய பயண அட்டையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களுக்கு மினி பேருந்து இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மேலும், வரைவு திட்ட அறிக்கையில் மினி பேருந்துகள் அதிகபட்சமாக 25 கி.மீ தூரம் வரை இயக்க அனுமதிக்கப்படும் என்றும், அதில் 18 கி.மீ சேவை இல்லாத வழித்தடங்களிலும், ஏற்கனவே சேவையில் உள்ள வழித்தடங்களிலும் எட்டு கி.மீ தூரம் வரை இயக்க அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தவிர ஒரு மினி பேருந்தில் அதிகபட்சமாக 25 பேர் இருக்கை வசதி இருக்க வேண்டும் என்றும், ஜிபிஎஸ் வசதிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மினிபஸ் வரைவு திட்ட அறிக்கை குறித்து பொதுமக்கள் 30 நாட்களுக்குள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும், ஜூலை 22, 2024 அன்று தலைமை செயலகத்தில் உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுவதற்கான ஆட்சேபனைகளும் கூட்டத்தில் எழுப்பப்பட்டன.
தற்போது பிப்ரவரி முதல் சென்னையின் புறநகர்ப் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை தனியாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையே இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், கடந்த காலங்களில் இல்லாத வகையில் சென்னையில் தனியார் மினி பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.
மேலும் சென்னையில் பொதுப்போக்குவரத்து வசதியை மேம்படுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை 8000 ஆக உயர்த்த வேண்டும்; அவற்றில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிப்பதன் மூலம் பொதுப்போக்குவத்துப் பயன்பாட்டை அதிகரித்து, சென்னையில் மகிழுந்துகளின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்; அதன் வாயிலாக போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை ஆகும். இதை நோக்கி அரசின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அது வரவேற்கத்தக்கதாகும் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மினி பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக இப்படி ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டிருந்தால் அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்கு தொடரும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.