இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கபோவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மீனவர்கள் காங்கேசன் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகையும், அதிலிருந்து 23 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர். பின்னர் அவர்கள் இலங்கை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராமேஸ்வரம் மீனவ சங்க பிரதிநிதிகள் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தினர் அதில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ள 23 மீனவர்களையும் படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
இது மட்டுமன்றி கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை இலங்கை அரசின் வசமுள்ள 150 மேற்பட்ட விசைப்படகுகளை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி இன்று ஒரு நாள் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.