விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதிகளில் நேற்று இரவு விட்டு, விட்டு சாரல்மழை பெய்தது. பகல் நேரத்தில் கடுமையாக வெயில் இருந்துவந்த நிலையில் பிற்பகலில் மேகமூட்டமாக இருந்து, இதமான குளிர்காற்று வீசி வந்தது. மாலை நேரத்தில் பலத்த காற்று வீசியது. சற்று நேரத்தில் பலத்த இடி, மின்னலுடன் சாரல்மழை பெய்தது. இரவில் விட்டு விட்டு தொடர் சாரல்மழை பெய்து கொண்டே இருந்தது. சிவகாசி புறநகர் பகுதிகளில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. திடீர் மழை காரணமாக சிவகாசி பேருந்து நிலையப் பகுதிகள், சாத்தூர் சாலை, காந்தி சாலை, மணி நகர், தெய்வானை நகர், விஸ்வநத்தம் சாலை உள்ளிட்ட பல இடங்களிலும் இரவு 8 மணி வரை மின்தடை ஏற்பட்டது. சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
