சென்னை வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் இருந்து போஜராஜா நகர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் வாகனங்கள் திருப்பி விடப்படுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் 05.05.2023 முதல் செயல்பாட்டுக்கு வரும்:
1.கண்ணன் ரவுண்டானாவிலிருந்து வெளியே செல்லும் வாகனங்கள் கண்ணன் தெரு வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
2.கண்ணன் ரவுண்டானாவிலிருந்து கண்ணன் தெருவுக்குச் செல்லும் இரு சக்கர வாகனங்கள் பரசுராமன் தெரு – தர்மராஜா கோவில் தெற்குப் பாதை வழியாக கண்ணன் சாலையை சென்றடையலாம்.
3.கண்ணன் ரவுண்டானாவிலிருந்து கண்ணன் தெருவுக்குச் செல்லும் இலகுரக மோட்டார் வாகனங்கள் திருவெற்றியூர் சாலை – M.S. நாயுடு தெரு – சின்ன முனுசாமி தெரு வழியாக கண்ணன் சாலையை அடையலாம்.
4.போஜராஜா நகர் செல்ல விரும்பும் கனரக வாகனங்கள் சிபி ரோடு – கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் – கண்ணன் தெரு – போஜராஜா நகர் ரயில்வே கேட் வழியாக போஜராஜா நகரை அடையலாம்.
5.கண்ணன் தெருவில் இருந்து கண்ணன் ரவுண்டானா வழியாக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
6.கண்ணன் தெருவில் இருந்து கண்ணன் ரவுண்டானாவுக்குச் செல்ல விரும்பும் வாகனங்கள் சின்ன முனுசாமி தெரு – எம்.எஸ். நாயுடு தெரு – சாலை வழியாக கண்ணன் ரவுண்டானாவை அடையலாம்.